மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் தமிழகத்திலும் பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக இன்று கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் எதிரானது எனவும் இதனால் இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்கள், இலங்கை தமிழர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகும் என்றும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.
இதேபோல், டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சையிலும், தென் மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலியிலும் திமுக சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்து காவல் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்த சட்ட நகலை எரிக்க முயற்சி - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது