கரோனா பாதிப்பு காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்து அமைப்பினர் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உயர் நீதிமன்றத்தை மதிக்காமல் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் இந்து அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு. ராமகிருட்டிணன், "தமிழ்நாடு அரசு விதித்துள்ள உத்தரவை மதிக்காமல் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது கண்டனத்திற்குரியது. இதை கோவை மாநகர காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. நீதிமன்ற உத்தரவை மீறி விநாயகர் சிலைகளை வைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: மண்டியிட்டு விநாயகரை வணங்கிய யானைகள்!