கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆங்கில வழி மருத்துவமும் ஆயுர்வேதா, சித்தா ஆகிய மருத்துவங்களும் இணைந்து கலப்பு மருத்துவம் என்று அழைக்கப்படும் என்று மத்திய அரசு கூறியது. ஆயுர்வேதா, சித்தா ஆகிய மருத்துவர்களும் 10 மாதங்கள் அறுவை சிகிச்சை பயிற்சி மேற்கொண்டு 58 அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்தது. இதனைக் கண்டித்து ஆங்கில வழி மருத்துவர்கள் தர்ணா போராட்டம் போன்றவற்றை நடத்தினர்.
இந்நிலையில் இந்த நடவடிக்கையை அரசு கைவிடக்கோரி இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் கோவை புரூக் பீல்ட் சாலையில் உள்ள இந்திய மருத்துவர்கள் சங்க அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் 14ஆம் தேதிவரை இந்தப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர். மேலும் இதில் தமிழ்நாடு முழுவதும் 14ஆம் தேதி வாகன பேரணி நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர். இதில் மருத்துவக் கல்லூரி மாணவர்களும் கலந்துகொண்டனர்.
இது குறித்து பேசிய இந்திய மருத்துவச் சங்க செயலாளர் ரவிக்குமார் (மருத்துவர்), “இந்தக் கலப்பு மருத்துவத்தால் 2030இல் எம்பிபிஎஸ், ஆயுர்வேதம் போன்ற மருத்துவம் இல்லாமல் கலவை மருத்துவம்தான் இருக்கும். ஆயுர்வேத மருத்துவம் தலைசிறந்த மருத்துவம், அதில் இருக்கக்கூடிய மருத்துவர்கள் அதில் அடுத்தடுத்தபடி நிலைகளுக்குத்தான் போக வேண்டும்.
அவர்களுக்கு 10 மாதங்கள் அறுவை சிகிச்சைப் பயிற்சி அளித்து மார்டன் மருத்துவத்திற்கு அங்கீகரிப்பது சரிப்பட்ட முறையல்ல. இம்முறை மருத்துவமானது பொதுமக்களையும் நோயாளிகளையும்தான் பாதிக்கும்" என்று கூறினார்.