கோவை: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது சகோதரர் அசோக், அமைச்சரின் ஆதரவாளர்கள், நண்பர்கள் வீடு என தமிழகம் முழுவதும் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 26ஆம் தேதி தொடங்கிய இந்த சோதனை தொடர்ந்து நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கோவையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும், ரியல் எஸ்டேட் அதிபருமான செந்தில் கார்த்திகேயனுக்கு சொந்தமாக வீடு மற்றும் அலுவலகங்களில் அதிகாரிகள் நான்காவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள செந்தில் கார்த்திகேயனுக்கு சொந்தமான வீட்டில் முதற்கட்டமாக சோதனை நடைபெற்றது. அந்த சோதனை நேற்று இரவுடன் முடிவடைந்த நிலையில் இன்று அவரின் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: IT Raid: தொடரும் வருமான வரித்துறையினரின் சோதனை..கரூர் வீட்டிற்கு அடுத்த ரெய்டு!
இது குறித்து தகவல் அளித்துள்ள செந்தில் கார்த்திகேயன் வருமான வரித்துறை அதிகள் அவர்களின் பணியை செய்ய நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், அதிகாரிகள் தங்களை தொந்தரவு செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் பொள்ளாச்சி சேத்துமடையைச் சேர்ந்த அரவிந்த் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள அவரது தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் நான்காவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் வரவு செலவு விவரங்கள், சொத்து மதிப்புகள், விலை உயர்ந்த கார்கள் உள்ளிட்டவை குறித்த ஆவணங்களை சரி பார்த்து ஆய்வு செய்வதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிகிறது. அதேபோல, அமைச்சரின் நெருங்கிய நண்பர் சங்கர் ஆனந்த் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளிட்ட பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வரும் அதிகாரிள், கோவை மாவட்டத்தில் மட்டும் மொத்தம் ஏழு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: வாகன விபத்து - இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!
முன்னதாக கரூரில் நடைபெற்ற வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையின்போது செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். அதில் சில அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் தற்போது கோவையில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சோதனைகள் இன்றுடன் நிறைவடைய வாய்ப்புகள் உள்ளதாக வருமான வரிதுறை அதிகாரிகள் வட்டம் தகவல்கள் தெரிவிக்கின்றன.