கோயம்புத்தூர்: இன்று மத்திய நிதிநிலை அறிக்கைத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் குறித்து கான்ஃபெடரேசன் ஆஃப் இந்தியன் இண்டஸ்ட்ரி அமைப்பினர் செய்தியாளரைச் சந்தித்தனர்.
இதில் செய்தியாளரிடம் பேசிய மாவட்டத் தலைவர் அர்ஜுன் பிரகாஷ், “இந்த பட்ஜெட்டில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான தேவைகளைக் கவனத்தில்கொண்டு நிதிநிலை அறிக்கைத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. அனைத்துத் துறைகளுக்குப் பயன்படும்விதத்தில் பட்ஜெட் அமைந்துள்ளது.
வரிகள் பற்றிய தொகுப்பில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. அம்ருதா திட்டம் முதலீட்டை ஊக்குவிக்கும்விதத்தில் உள்ளது. நாட்டின் எதிர்கால வளர்ச்சி சார்பாக பட்ஜெட் அமைந்துள்ளது.
கார்பன்-டை-ஆக்சைடு இல்லா தயாரிப்பை வரவேற்கிறோம்
புதிய தொழில்நுட்பம் சார்ந்துள்ள தொழில்களுக்கும் புதிதாகத் தொடங்கப்பட உள்ள தொழில்களுக்கும் பட்ஜெட் பயனளிக்கும்படி உள்ளது. டிஜிட்டல் சார்ந்த கல்வி கற்கும் முறைகள், மருத்துவம் ஆகியவற்றை ஊக்குவிக்கும்விதமாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்.
கார்பன்-டை-ஆக்சைடு இல்லா தயாரிப்பை ஊக்குவிக்கும்விதமான அறிவிப்புகளை வரவேற்கிறோம். அதே சமயம் இந்த பட்ஜெட் தொலைநோக்குப் பார்வையுடன் போடப்பட்டுள்ளது. உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்யும்விதமாகப் போடப்படவில்லை. இந்த நிதிநிலையைத் தொலைநோக்குப் பார்வையில் பார்க்கும்போது திருப்தி அளிக்கும்படி உள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாட்டுக்கு வழி வகுக்கும் பட்ஜெட் - பாமக நிறுவனர் ராமதாஸ்