கோயம்புத்தூர்: கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் (30). இவருக்கு தாய் மற்றும் உடன் பிறந்தவர்கள் நான்கு பேர் உள்ளனர். இவருக்கு இரண்டு வயதில் ஏற்பட்ட மூளைக் காய்ச்சலால் பார்வை பாதிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக பார்வையை இழந்து வந்துள்ளார். இவர் சுமார் 6 வயதில் முற்றிலுமாக பார்வையை இழந்துள்ளார்.
பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற போதிலும் குணப்படுத்த முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர், அவரை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள அரசு கண் பார்வையற்றவர்களுக்கான பள்ளியில் சேர்த்துள்ளனர். அங்கு சிறிது காலம் இருந்த அவர், மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அந்நிலையில் அவரது தந்தையும் உயிரிழந்து விட்டார். பார்வை மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், வீட்டில் இருந்த மின் சாதனங்களை பழுது பார்த்து சரி செய்வது போன்ற பணிகளில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.
மேலும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கோவை சரவணம்பட்டியில் குடியேறிய நிலையில், அவரது அக்கா ரேவதி இவரது ஆர்வத்தைப் பார்த்து அருகே உள்ள எலக்ட்ரிக் கடை ஒன்றில் வேலைக்கு சேர்த்துள்ளார். அங்கு பணிக்கு சேர்ந்த சுரேஷ்குமார், வாடிக்கையாளர்களின் விபரங்களை சேகரிக்க, கடையில் யாரும் இல்லாதபோது பார்த்துக் கொள்வது போன்ற வேலைகளை செய்துள்ளார். அப்போது தமக்கு உள்ள ஆர்வத்தை கடை உரிமையாளரிடம் கூறியதால் சிறு சிறு வேலைகளை அவர் கற்றுக் கொடுத்துள்ளார்.
அதன்பின், கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக கவனம் செலுத்தி எலக்ட்ரிக் பணிகளை கற்றுக் கொண்ட சுரேஷ்குமார் ஒரு கட்டத்தில் தனியாக யாருடைய உதவியும் இல்லாமல் மிக்ஸி, குளிர்சாதனப்பெட்டி, மின் விசிறி, சலவை இயந்திரம், இஸ்திரிப் பெட்டி, ரேடியோ உள்ளிட்ட அனைத்து வகையான மின் சாதனப் பொருட்களையும் பழுது பார்க்கும் பணிகளை செய்யத் துவங்கினார்.
பிறகு, வேறு ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக யாருடைய உதவியும் இல்லாமல் மின் சாதனப் பொருட்களை பழுது பார்க்கும் வேலையை செய்து வரும் சுரேஷ்குமார், தனது வருமானத்தில் வீட்டு வாடகை, உணவு ஆகியவற்றை சமாளித்து வருகிறார்.
இவரது தன்னம்பிக்கையை பார்த்து அவரது அக்கா ரேவதியின் முயற்சியாக கவுண்டம்பாளையம் பகுதியில் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து கடந்த 6 மாதங்களாக சொந்த கடையாக நடத்தி வருகிறார். இவருக்கு அவரது நண்பர்களும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.
மேலும், சிறிய அளவிலான வீட்டில் அவரும் அவரது தாயாரும் வசித்து வருகின்றனர். கழிப்பறைக்குச் செல்ல வேண்டுமென்றாலும் வீட்டில் இருந்து வெளியே வந்து சாக்கடையைத் தாண்டி பின்புறம் செல்ல வேண்டும். இதனைத் தொடர்ந்து வீட்டிலும் பல்வேறு பொருட்களை பழுது நீக்கி வருகிறார்.
அது மட்டுமில்லாமல், அவருக்கு கீ போர்டு வாசிப்பதில் ஆர்வம் மிகுதி. அதனால் கீ போர்டு வாசிப்பதை முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியில் பயின்றுள்ளார். குறிப்பாக, இவர்களுக்கு ரேஷன் கார்டு இல்லை. ரேஷன் கார்டுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேட்டால், வேறு இடத்திற்குச் செல்ல வேண்டும் என அலைக் கழிப்பதாகவும் வருத்தம் தெரிவித்தார்.
அதேநேரம் தானும், தனது தாயாரும் தற்போது வாடகை வீட்டில்தான் குடியிருந்து வருவதாகவும் ,தங்களுக்கு பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கிய நிலையில், அதற்கு 2 லட்சம் ரூபாய் பணம் செலுத்த வேண்டி உள்ளதால், அதனை செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியரோ அல்லது முதலமைச்சரோ தங்களுக்கு அந்த வீடு கிடைப்பதற்கு உதவி புரியுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பணத்தைக் கண்டறியும் சென்சார் கருவிகளை யாராவது கண்டறிந்தால் தங்களைப் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறும் அவர், ஏற்கனவே ஒருமுறை தன்னை பண விஷயத்தில் ஒருவர் ஏமாற்றி இருப்பதாகவும் வருத்தம் தெரிவித்தார்.
இதையும் படிங்க:அப்துல் கலாம் நினைவு நாள்: ஓடிக்கொண்டே ஏபிஜே உருவத்தை வரைந்த ஆசிரியர்!