கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஒன்றியங்களுக்குட்பட்ட தெற்கு ஒன்றியத்தில் 26 ஊராட்சிகளில் 129 வாக்குச்சாவடிகளும், வடக்கு ஒன்றியத்தில் 39 ஊராட்சிகளில் 183 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் உள்ளாட்சித் தேர்தல் பெரிய அளவிலான பிரச்னைகளின்றி நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது.
பதற்றம் நிறைந்தவையாக பட்டியலிடப்பட்டிருந்த ஓட்டுச்சாவடிகளுக்கு தலா ஒரு எஸ்.ஐ., தலைமையில் கூடுதல் காவல் பாதுகாப்பு அளித்தனர். கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டிருந்தன. தெற்கு, வடக்கு ஒன்றியங்களில் ஏ.டி.எஸ்.பி., விஜய் கார்த்திக் ராஜ் தலைமையில், ஆறு டி.எஸ்.பி.,க்கள், 12 இன்ஸ்பெக்டர்கள், 25 சிறப்பு காவலர்கள் என மொத்தம், 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வாக்குப்பதிவு நேற்று மாலை ஐந்து மணியுடன் நிறைவடைந்தது. வாக்குச்சாவடிகளில் உள்ள அலுவலர்கள், முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. தெற்கு ஒன்றியத்தில் அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையத்திலிருந்து வாக்குப்பெட்டிகள் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், வடக்கு ஒன்றியத்தில் அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையத்திலிருந்து வாக்குப்பெட்டிகள் பல்லடம் சாலையில் உள்ள பிஏ பொறியியல் கல்லூரியிலும் காவல் துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
ஜனவரி 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பதால் வாக்குப்பெட்டிகள் வைத்திருக்கும் மையங்களுக்கு பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் உரையை கேட்க மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் - ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு