கோயம்புத்தூர்: திமுக, கூட்டணிக் கட்சிகள் சார்பில், நாளைய தினம் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை குறித்தான ஆலோசனைக் கூட்டம் காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் ஆடிட்டோரியத்தில் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய செந்தில்பாலாஜி, “நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் எதிர்க்கட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையைச் சீர்குலைக்க முயற்சிக்கிறது.
கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறது. எதிர்க்கட்சிகள் கலவரம் செய்தால் நாம் பொறுமையாக இருக்கக் கேட்டுக்கொண்டுள்ளோம். இந்தத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றிபெறும்.
எதிர்க்கட்சி நிர்வாகிகள் வாக்குப்பதிவு மையங்களுக்குள் சென்றுள்ளனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் எந்த அடையாள அட்டையை வைத்து வாக்குச்சாவடிக்குள் சென்றுள்ளனர். அதற்கு அனுமதி கொடுத்தது யார்? வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு ஆயிரக்கணக்கான நபர்களைக் கொண்டு வன்முறையைத் தூண்ட முயற்சிக்கின்றனர்.
வாக்கு எண்ணிக்கை மையத்திற்குத் தேவையான பாதுகாப்பு உள்ளது. எதிர்க்கட்சி போடுகின்ற கூட்டம் ரகசியமாகவே நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் வாக்காளர்களின் முகவரி மாற்றங்களில் சில பிரச்சினைகள் இருந்ததால் பூத் சிலிப் தருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம்.
தேர்தலின்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்குச்சாவடிக்குள் சென்றது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாளை வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற வேண்டும்" எனத் தெரிவித்தார். இதில் திமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு