கோயம்புத்தூர்: மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அருணாச்சலம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாஜக-வில் இணைந்தார். இதனிடையே அவர் மீண்டும் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார். கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து மீண்டும் கட்சியில் இணைந்துள்ளார்.
இதனிடையே கோவையில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். கோவை டவுன்ஹால் அருகே உள்ள தனியார் ஹாலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அக்கட்சியின் துணைத் தலைவர் தங்கவேலு, மாநில செயலாளர்கள் மயில்சாமி, மூகாம்பிகா ரத்தினம், அனுஷா ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் அருணாச்சலம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இரண்டு வருட வனவாசத்திற்கு பிறகு தாய்க்கட்சியான மக்கள் நீதி மய்யத்திற்கு தாயுள்ளத்தோடு நம்மவர் என்னை அரவணைத்து ஏற்றுக் கொண்டார்.
தொண்டர்கள் அனைவரும் தாயுள்ளத்தோடு வரவேற்பு கொடுத்தனர். கடைக்கோடி தொண்டர்கள் வரை அனைவரும் ஏற்றுக் கொண்டனர் என தெரிவித்தார். நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி கூற முதற்பயணமாக கோவை வந்துள்ளேன்.
உடனடியாக களத்திற்கு சென்று தொண்டர்களின் கருத்தை கேட்டு அதனை தன்னிடம் கூறுமாறு நம்மவர் என்னிடம் தெரிவித்தார்.
அனைத்து மாவட்ட செயலாளர்கள், மண்டல செயலாளர்கள், இங்குள்ளவர்கள் சட்டமன்ற தேர்தலில் உழைத்தமைக்கு நன்றி செலுத்த நான் கடமைப்பட்டுள்ளேன் என கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் அமோக வெற்றி பெற ஆலோசனை நடத்தப்படுகிறது. தேர்தலுக்கு இது முதல் தொடக்கமாக இருக்கும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமைச்சரான பிறகு உதயநிதி நடிக்கக்கூடாது - இயக்குநர் அமீர்