கோவை: காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் உணவகத்தில் நேற்று இரவு 10:20 மணியளவில் உணவு அருந்திக்கொண்டிருந்த மக்கள் மீது சி1 காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து, லத்தியால் தாக்குதல் நடத்தினார். அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கடையின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் அவர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து அந்த உணவகத்தின் உரிமையாளர் மோகன்ராஜ், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," கரோனா தொற்று விதிமுறைகள்படி இரவு 11 மணிவரை கடைகள் செயல்பட அனுமதிக்கலாம் என அரசு கூறியுள்ள நிலையில் இரவு 10:20 மணி அளவில் உதவி ஆய்வாளர் கடைக்குள் நுழைந்து உணவருந்திக் கொண்டிருந்த பொதுமக்களை தாக்கினார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டால் ஆய்வாளர் லதா கூறியதன் பேரிலேயே இவ்வாறு நடந்துகொண்டோம் என்கிறார். உணவு தயாரிப்பவர்களையும் தாக்கியதால் அவர்கள் பணிக்கு வரவே அச்சம் கொள்கின்றனர். அனைவரும் வெளி ஊரிலிருந்து பணிக்கு வந்தவர்கள். இந்த நிகழ்வு அனைத்திற்கும் உதவி ஆய்வாளரின் பணிமாற்றம் ஒரு தீர்வாகாது. அனைத்து கடைகளிலும் மாமூல் வசூலித்தாலும் இது போன்று நடந்துகொள்வது சாத்தான்குளம் சம்பவம் போன்று உள்ளது. இது போன்ற நிலைமை வேறு எந்த கடைக்காரர்களுக்கும் வரக்கூடாது" என்று தெரிவித்தார்.