சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் எஸ்பிக்கு டிஜிபி அந்தஸ்து அலுவலர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட எஸ்பி டிஜிபியிடம் புகார் அளித்தார். புகார் தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு டிஜிபி உத்தரவிட்டார்.
இந்த புகாரில் முகாந்திரம் இருந்ததால், பாலியல் தொல்லை கொடுத்த டிஜிபி, பெண் எஸ்பியை தடுத்த மாவட்ட எஸ்பி ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் டிஜிபி அந்தஸ்து அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து குற்றம் சுமத்தப்பட்ட டிஜிபி, மாவட்ட எஸ்பி ஆகியோரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் தனித்தனியாக விசாரணை நடத்தினர். வழிமறித்ததாக கூறப்பட்ட காவல் அலுவலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது டிஜிபி மீதான பாலியல் வழக்கு தொடர்பான விசாரணையை சிபிசிஐடி காவல் துறையினர் தீவிரம் காட்டி உள்ளனர்.
இந்த பாலியல் வழக்கில் டிஜிபி அந்தஸ்து அலுவலர் மேல் நடவடிக்கை எடுப்பதற்காகவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான அனுமதியை சிபிசிஐடி காவல் துறையினர் தமிழ்நாடு உள்துறையிடம் கேட்டுள்ளனர்.
தமிழ்நாடு உள்துறை, ஒன்றிய உள்துறைக்கும், ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் நடவடிக்கை எடுப்பதற்காக அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. ஐபிஎஸ் அலுவலர்கள் மீது குற்றப்பத்திரிகை, மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் ஒன்றிய உள்துறை, ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உத்தரவை பெற்று மாநில அரசு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்பது குற்றவியல் நடைமுறை சட்டம்.
இதனால் டிஜிபி அந்தஸ்து அலுவலர் மீது பாலியல் வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட டிஜிபி, எஸ்பி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும், மேல் நடவடிக்கையில் ஈடுபடவும் ஒன்றிய உள்துறை, ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த பாலியல் வழக்கை விசாரிப்பதற்காக விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை அறிக்கையை கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு அரசிடம் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. ஒன்றிய அரசு அளிக்கக்கூடிய ஒப்புதலை பெற்று டிஜிபி அந்தஸ்து அலுவலர், எஸ்பி மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி பாலியல் புகார் அளிக்க வரும் போது தடுத்து நிறுத்தியதாக குற்றம்சாட்டிய மேலும் 3 காவல் அலுவலர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிபிசிஐடி தரப்பில் தமிழ்நாடு அரசிடம் கேட்டு கொண்டதாக தெரிகிறது.
இதையும் படிங்க: ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்?