சதுப்பு நிலத்தை பாதுகாக்க ஒவ்வொரு மாநில உயர் நீதிமன்றங்கள் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உரிய உத்தரவுகளை பிறப்பித்து சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற விசாரணைக்கு உதவும் வகையில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமனை நியமித்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாட்டில் உள்ள கழுவேலி, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட ஆய்வறிக்கையை மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமன் தாக்கல் செய்தார்.
அதில், சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பல்வேறு தரப்பினர் ஆக்கிரமித்திருப்பதாகவும், 1965ஆம் ஆண்டு ஐந்தாயிரத்து 500 ஹெக்டேராக இருந்த சதுப்பு நிலம் 2013ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 600 ஹெக்டேராக சுருங்கிவிட்டதாக கூறப்பட்டிருந்தது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையொட்டியுள்ள மாநகராட்சியின் இரண்டு குப்பைக் கிடங்குகளால் நீராதாரம், தாவரங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆயிரத்து 85 குடியிருப்புகள் ஆக்கிரமித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும், பறக்கும் ரயில் நிலையத்தால் 100 ஏக்கர் சதுப்பு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், 20.25 ஏக்கர் சதுப்பு நிலம் தேசிய கடல்சார் கல்வி நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளாகவும் தெரிவித்திருந்தார். மத்திய காற்றாலைகள் நிறுவனம், பல தனியார் ஐ.டி. நிறுவனங்களும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்துள்ளன என்றார்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உயர் மின் கோபுரங்களால், அங்கு வரக்கூடிய அரியவகை பறவை இனங்கள் தற்போது வருவதில்லை எனவும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர குப்பைக் கிடங்குகளை அகற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். சதுப்பு நிலத்தில் வளரும் தாவர வகையை பாதுகாக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள கழுவேலி சதுப்பு நிலம், 600 சதுர கிலோமீட்டரிலிருந்து 75 சதுர கிலோமீட்டர் அளவிற்கு சுருங்கிவிட்டதாகவும் அங்கு சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளை அகற்ற வேண்டும் என்றும் ஆய்வறிக்கையில் வலியுறுத்தியிருந்தார்.
இதற்கிடையில், கோவையைச் சேர்ந்த மோகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "கோவையில் உள்ள வேடப்பட்டி, புதுகுளம் உள்ளிட்ட 47 நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. அந்த நீர்நிலைகளில் உள்ள மரங்களை பாதுகாக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
![சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்துள்ள அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் ஆய்வறிக்கை தாக்கல், wetland encroachment report filed, சென்னை உயர்நீதிமன்றம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4184047_hc.jpg)
இந்நிலையில், பி.எஸ். ராமன் தாக்கல் செய்த ஆய்வறிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசு வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.