தமிழ்நாடு தலைநகரான சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று விமான நிலையம். நகரத்தின் 7 கிலோ மீட்டர் தெற்கே மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இது மும்பை, டெல்லி ஆகியவற்றுக்கு அடுத்தபடியான முக்கிய விமான நிலையமாகும். இரண்டாம் உலகப்போரின்போது இராணுவத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட இவ்விமான நிலையம், இன்று தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஒன்றாக மாறியுள்ளது.
சுற்றுச்சுழலைக் கருத்தில் கொண்டு விமான நிலையத்தில் காகிதக் கிண்ணத்தை (cup) அறிமுகப்படுத்தியது முதல், சுகாதாரமான இலவசக் குடிநீரை வழங்கியது வரை சென்னை விமான நிலையத்திற்குத்தான் முதலிடம்.
தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள சென்னை விமான நிலையத்தின் சுற்றுச்சுவர், திரிசூலத்திலிருந்து பரங்கிமலை வரை நீண்டது. அங்குள்ள சுற்றுச்சுவர் பகுதிகளில் கடும் அசுத்தம் நிலவியதால், அதனைத் தடுக்க விமான நிலையம் சார்பில் பல நடவடிக்கைள் எடுக்கப்பட்டது. ஆனாலும் பயனில்லாததால் விமான நிலைய நுழைவுப் பகுதி முழுவதும் உள்ள சுவற்றில் கலாச்சார ஓவியங்களை வரையத் திட்டமிட்டனர்.
அதன்படி, சென்னை விமான நிலைய ஆணையம், இந்தியச் சுற்றுலாக் கழகம், தமிழ்நாடு சுற்றுலாக் கழகம் இணைந்து, திரிசூலத்திலிருந்து மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வரை உள்ள சுற்றுச்சுவரில் ஓவியங்கள் வரைய முடிவு செய்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வ அமைப்பினர், ஓவியர்கள் கொண்டு ஒரே நாளில் இரண்டரை கிலோ மீட்டர் சுற்றுச்சுவரில் ஓவியங்கள் வரைய திட்டமிட்டனர்.
அதன்படி 1500க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து சுவரில் ஓவியங்கள் வரையத் தொடங்கினர். இதில் அரசுப்பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் இந்திய, தமிழ்க் கலாச்சாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் ஓவியங்கள் சுவரில் வரையப்பட்டன.
இதில் கலந்துகொண்டு ஓவியங்கள் வரைந்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இந்த சுவர்கள் முழுவதும் மாணவர் வரைந்த ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதனால்,சென்னை விமான நிலைய சுற்றுப்பகுதி அழகுபடுவதுடன், தமிழ்நாடு கலாச்சாரத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நிம்மதியில்லாத நெடுஞ்சாலை பயணம்.!