விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக வரும் தேய்பிறை சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி நாளாகும். விநாயகருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் இன்று (ஆகஸ்ட் 25) கடைப்பிடிக்கப்படுகிறது. சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபீட்சம் பெருகும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை.
சங்கடஹர என்றால், துன்பத்தை நீக்குதல் என்று பொருள். உலக வாழ்வில் நாம் செய்த கர்மவினையின் பலனாக வரும் எல்லாவித இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளைத் தருவதால் அன்றைய தினம் இருக்கும் விரதம் சங்கடஹர சதுர்த்தி விரதம் என்று போற்றப்படுகிறது.
சங்கடஹர சதுர்த்தி உருவான கதை
சங்கடஹர சதுர்த்தி மாதந்தோறும் வரும் என்றாலும், விநாயகர் அவதரித்த ஆவணி மாதத்தில் பௌர்ணமிக்குப் பிறகு வரும் (தேய்பிறை) சதுர்த்தி, மஹா சங்கடஹர சதுர்த்தி என்று கூடுதல் சிறப்பு பெறுகிறது. அன்றைய நாளில் விநாயகரை வணங்கி, வழிபடுவோருக்கு, சகலவிதமான சங்கடங்களும் விலகும், சந்தோஷம் பெருகும் என்று கூறப்படுகிறது.
விநாயகர் ஒருமுறை கயிலாயத்தில் நடனமாடிக்கொண்டிருந்தபோது அங்கே வந்த சந்திரன், விநாயகரின் தோற்றத்தைக் கண்டு சிரித்தான். தன்னைப் பார்த்து சந்திரன் சிரிப்பதை பார்த்த விநாயகர், ஒளியில்லாமல் போகும்படி சாபமிட்டார். இதனால் மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று கடும் விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றார்.
அப்போது விநாயகர் சந்திரனிடம், இன்றுமுதல் சுக்கில பட்சச் சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும், அதைப் போக்கிக் கொள்ளச் சதுர்த்தி விரதம் இருந்து பூஜித்தால் அவர்களுக்கு தோஷங்கள் நீங்கும் என்று வரம் அளித்தார். இந்த விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் என அழைக்கப்படுகிறது.
சங்கடஹர சதுர்த்தி விரதம்
விரதங்களுக்குள் முதன்மையானதும் எளிமையானதும் சதுர்த்தி விரதம்தான். முதன்முதலில் சதுர்த்தி விரதம் கடைப்பிடித்த பிறகுதான், கிருத்திகை, ஏகாதசி, பௌர்ணமி போன்ற மற்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டும். ஆவணி மாதத்தில் வருகிற விநாயகர் சதுர்த்தி நாளில்தான், சுக்லபட்ச சதுர்த்தி விரதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து மாதந்தோறும் வருகிற சதுர்த்தி நாள்களில் விரதமிருந்து விநாயகரை வழிபடலாம். 11 சதுர்த்தி நாள்களில் விரதமிருந்து சதுர்த்தி விரதத்தைப் பூர்த்திசெய்யலாம். சதுர்த்தி அன்று, காலையில் குளித்துவிட்டு, அருகிலுள்ள ஆலயத்துக்குச் செல்ல வேண்டும். பிள்ளையாரை 11 முறை வலம்வர வேண்டும்.
அறுகம்புல் கொடுத்து, விநாயகருக்கு அர்ச்சனை செய்து, தோப்புக்கரணம் போட்டும் விநாயகரை வணங்க வேண்டும். கோயிலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும், ஆழாக்குப் பச்சரிசியை ஊறவைத்து, அத்துடன் சிறிது வெல்லத்தூளும் ஒரு வாழைப்பழமும் சேர்த்துப் பிசைந்து, பசுவுக்குக் கொடுக்க வேண்டும். கணபதியோடு பசு வழிபாடு செய்வது கூடுதல் நன்மை தரும் என்பது இறையுணர்வு கொண்டோரின் நம்பிக்கை.