சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடமாடும் வாகனங்கள், ஆன்லைன், தொலைபேசி வாயிலாக மளிகைப் பொருள்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் குறித்த விவரங்களை இணையதளம், நம்ம சென்னை செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம் எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வரும் ஜூன் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு மளிகை பொருள்கள் அவர்களின் பகுதிகளிலேயே கிடைக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் வணிகர் சங்கங்களுடன் இணைந்து நடமாடும் வாகனங்கள், ஆன்லைன், தொலைபேசி ஆர்டர்களின் மூலம் 31ஆம் தேதி முதல் நாள்தோறும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை விற்பனை செய்யச் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு மளிகைப் பொருள்களை விநியோகிக்க தொழில் உரிமம் பெற்ற 7,500 க்கும் விற்பனையாளர்களின் வாகனங்களுக்கான அனுமதிச்சீட்டு, அந்தந்த மண்டல அலுவலகங்களில் உதவி வருவாய் அலுவலர், சம்பந்தப்பட்ட வார்டு அலுவலகங்களில் வரி வசூலிப்பாளர் மூலம் இன்று (மே.30) முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை, 2197 விற்பனையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு அவர்களின் விவரம் http://covidte.chennaicorporation.gov.in/covid/groceries/ என்ற இணையதளம், நம்ம சென்னை செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதில் அங்காடியின் பெயர், தொலைபேசி எண், வார்டு, அந்த பகுதியில் உள்ள சிறிய கடை அல்லது சூப்பர் மார்க்கெட் என வகைப்படுத்தி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.