இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவரும் சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட தேசிய ஆணையம் பட்டியலினத்தவருக்கான ஆணையம் ஆகும். தேசிய ஆணையம் உருவாக்கப்பட்டதையடுத்து மாநிலங்கள் எல்லாவற்றிலும் மாநில அளவிலான ஆணையங்கள் உருவாக்கப்பட்டன.
ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை மாநில அளவிலான பட்டியலினத்தவருக்கான ஆணையம் உருவாக்கப்படவில்லை. இது தொடர்பாகப் பலமுறை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்தியும் கூட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் இதற்காக வழக்கு தொடுக்கப்பட்டது. அப்போது, ஆறு மாதங்களுக்குள் மாநில ஆணையத்தை உருவாக்குகிறோம் என்று தமிழ்நாடு அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.
![தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் விசிக thol thirumavalavan National Commission for Scheduled Castes vck தொல் திருமாவளவன் திருமா அறிக்கை பட்டியிலின ஆணையம் திருமா அறிக்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7703183_thiruma.png)
அவ்வாறு உறுதியளிக்கப்பட்டு சுமார் ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதும்கூட அந்த ஆணையம் உருவாக்கப்படவில்லை. தேசிய ஆணையத்தின் இயக்குநர் அலுவலகம் மட்டுமே இங்கே இருக்கிறது. அதிலும் இயக்குநர், துணை இயக்குநர் உதவியாளர்கள் உள்ளிட்ட 8 பதவிகள் நீண்ட நாள்களாகவே காலியாக உள்ளன.
இந்திய அளவில் பட்டியலினத்தவர் மீதான வன்கொடுமைகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருவதை தேசிய குற்ற ஆவண மைய அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன. இந்த வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்துவதற்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் எதையும் மத்திய அரசும் பின்பற்றுவதில்லை; தமிழ்நாடு அரசும் பின்பற்றுவதில்லை.
![தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் விசிக thol thirumavalavan National Commission for Scheduled Castes vck தொல் திருமாவளவன் திருமா அறிக்கை பட்டியிலின ஆணையம் திருமா அறிக்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7703183_thirumavalavan.png)
இதை மேற்பார்வை செய்வதற்கான அமைப்புதான் தேசிய பட்டியலினத்தவர் ஆணையமாகும். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் முதலான பதவிகள் நிரப்பப்படாமல் இருப்பது இந்தியாவிலிருக்கும் பட்டியல் இன மக்களை எந்த அளவுக்கு பாஜக அரசு புறக்கணிக்கிறது என்பதற்குச் சான்றாக உள்ளது.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் நடத்தப்பட வேண்டிய சீராய்வுக் கூட்டங்கள் பல ஆண்டுகளாகவே நடத்தப்படவில்லை என்று சமூகநீதித் துறை அமைச்சர் கடந்த மக்களவைக் கூட்டத் தொடரில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார். அவ்வாறு தெரிவித்ததற்குப் பிறகும்கூட மத்திய அரசோ மாநில அரசோ அதை சரி செய்வதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனையளிக்கிறது.
பட்டியலின மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்கள் முறையிடுவதற்கு தேசிய ஆணையத்திலோ தமிழ்நாட்டில் இருக்கும் மாநில அலுவகத்திலோ எவரும் இல்லை என்கிற நிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும். இந்தப் பதவிகளை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: திருமாவளவனின் கோரிக்கையை ஏற்ற தென்னக ரயில்வே!