சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பரங்கிமலை கிராமத்தில் உள்ள 41,952 சதுர அடி நிலம், தற்காலிகமாகப் பயன்படுத்திக் கொள்ள காசிவிஸ்வநாதர் தேவஸ்தானத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த இடத்தில் வன்னியர் சங்கக் கட்டிடம் என்ற பெயரில் கட்டடம் கட்டப்பட்டு, நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
இந்த அரசு நிலத்தில் பல ஆண்டுகளாக உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கூறி, பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் அறிவிப்புகள் வெளியிட்டும், ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறாததால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுமார் நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு ஏக்கர் நிலத்தினை பல்லாவரம் வட்டாட்சியர் மூலம் மீட்ட அரசு, அங்கிருந்த வன்னியர் சங்க கட்டடத்துக்கு சீல் வைத்தது.
அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வன்னியர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், சுமந்தா காமினி என்பவரிடம் இருந்து இந்த நிலத்தை வாங்கியதாகவும், தற்போது அந்த கட்டடத்தில் உயர் கல்வி படிக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களின் விடுதி செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.