சென்னை: ஐ.நா சிறுவர் நிதியத்தின் சார்பில், கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி மும்பையில் நடந்த குழந்தைகளுக்கான பிரார்த்தனை மற்றும் செயலுக்கான உலக நாள் நிகழ்வில், மதுரையைச் சேர்ந்த குயின் மீரா தனியார் பள்ளி மாணவர்கள் பாடிய "அன்பே எங்கள் பாதை.. அறிவே எங்கள் பயணம்” எனும் பாடல் அரங்கேற்றப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில், இந்த பாடல் “குழந்தைகளுக்கான கீதம்" என அந்நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்டது.
மதன் கார்க்கி எழுத்தில் உருவான இந்த பாடலுக்கு, அனில் சீனிவாசன் இசை அமைக்க, பள்ளி இயக்குநர் அபிநாத் சந்திரன் தயாரித்துள்ளார். இந்நிலையில் இந்த பாடலை பாடிய பள்ளி மாணவர்களைப் பாராட்டும் விதமாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாடலாசிரியர்கள் வைரமுத்து, மதன் கார்க்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய பாடலாசிரியர் வைரமுத்து, "நான் பெருமையோடு, பெருமிதத்துடன் நிற்கிறேன். வைகை நதிக்கரையில் ஒரு தனியார் பள்ளி, இந்த பாடலால் உலகத்தின் உச்சத்திற்கு தமிழைக் கொண்டு சென்றிருக்கிறது. தமிழை தமிழாகவே உலக அரங்கில், உலக மாணவர் கீதம் என்ற முத்திரையோடு இந்தப் பாடல் ஒலிக்க இருக்கிறது.
இதையும் படிங்க: மீண்டும் இணையும் பகத் பாசில் - வடிவேலு கூட்டணி.. வெளியானது அதிகாரப்பூர்வ அப்டேட்!
இந்தப் பாடலில் இருக்கும் சத்தியம், நேர்மைதான் உலக அரங்கில் பாராட்டைப் பெற்று தந்து இருக்கிறது. கே.வி.மகாதேவன் மாதிரி பொருள் தெரிந்து, இசையமைப்பது யாரும் இல்லை. எல்லோருக்கும் எல்லாம் புரிய வேண்டும். காரணம், இது குழந்தைகளுக்கான பாட்டு. இந்த பாடலை குழந்தைகள் மொழியில் எழுதியதற்காக மதன் கார்க்கியை பாராட்டுகிறேன்.
அச்சத்தைப் போக்க வேண்டிய கல்வி, அச்சத்தின் சூழலில் இருப்பது எப்படி நியாயம் என்பதை இந்தப் பாடல் சொல்கிறது. கல்வி அச்சமற்று இருக்க வேண்டும். இந்தியா வல்லரசாக திகழக்கூடிய நாள் தூரம் இல்லை. அறிவு, அன்பு, அச்சமின்மை என்பதை கொண்ட நாடுதான் வல்லரசாகும்” என்றும் கூறினார்.
இதைத் தொடர்ந்து பேசிய அவர், மகனை பாராட்டினார் வைரமுத்து என்று செய்தி போடாதீர்கள், இன்னொரு பாடலாசிரியரை பாராட்டினார் வைரமுத்து என்று போடுங்கள்” என்று சிரித்து கொண்டே கூறினார்.