தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சாத்தான்குளத்தில் சிறைக் கைதியாக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 2 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இச்சூழலில் இச்செயலைக் கண்டித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ”சாலையோரம் கடை வைத்திருக்கும் பெண்ணை காவலர் ஒருவர் தரக்குறைவாகத் திட்டியதாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த அவரது மகன் அதனைத் தட்டிக் கேட்டுள்ளார். இதற்குக் காவல் துறையினர் அந்த இளைஞரைச் சரமாரியாக அடித்து உதைக்கும் காட்சி நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. காவல் துறையினரிடமிருந்து மகனைக் காப்பாற்ற காவலர்களின் காலில் விழும் தாய் கண்ணீர் விட்டு அழும் காட்சி பார்ப்பவரைக் கலங்க வைக்கிறது.
இதனை மீறி காவலர்கள் அவரது மகனை தரதரவென்று இழுத்துச் செல்கின்றனர். இதனை வீடியோ எடுத்த இளைஞரையும் அறைகின்றனர். இதுகுறித்து உதயநிதி, "தள்ளுவண்டி கடை நடத்தும் தன் தாயை ஊரடங்கை காரணம் காட்டி தரக்குறைவாக பேசும் போலீஸ் எஸ்.ஐ-யை மகன் தட்டி கேட்கிறான். அதற்கு அவனை அடித்து ஜீப்பில் ஏற்றுகின்றனர். அப்போது போலீசின் கோரப்பிடியிலிருந்து தன் மகனை காக்கக் கண்ணீருடன் கதறும் இந்த ஏழைத் தாயின் போராட்டம் நம்மைப் பதற வைக்கிறது.
ஊரடங்கிலும் கோர்ட் சென்று திறந்த டாஸ்மாக்கில் குவியும் கூட்டத்தை கண்டும் காணாமல் இருக்கும் போலீஸ், தள்ளுவண்டி, செல்போன் கடை நடத்தும் எளிய மனிதர்களின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துவது எவ்வகையில் நியாயம்? காவல்துறையை கவனிக்கும் தமிழ்நாடு அரசுக்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவர்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மதுரை மாநகரில் 1000 ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் உத்தரவு