சென்னை: கரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த 2020-21 ஆம் கல்வியாண்டில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் இல்லாமல் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தப்பட்டது. அதனால் பாடப்பகுதிகள் குறைத்து அறிவிக்கப்பட்டன.
மேலும், 2021-22 ஆம் கல்வியாண்டிலும் கரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் திறப்பு காலதாமதமானது. இதனால் பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டன. 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் கணிசமாகக் குறைக்கப்பட்டது.
![பள்ளிகளில் முழு பாடத்திட்டத்தையும் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15554544_t-hse.jpg)
அதன்படி,10-ஆம் வகுப்புக்கு 39 சதவீதம், 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு 35 சதவீதம் என்ற விகிதத்திலும், 1முதல் 9 ஆம் வரை 50 சதவிகித பாடங்கள் குறைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் வழக்கம் போல் (நேற்று.13) ஜூன் மாதம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் முழுப்பாடப்பகுதிகளும் புத்தகமாக தயார் செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு முழுப்பாடத்திட்டமும் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, அனைத்துப் பாடப்பகுதிகளையும் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ரீடிங் மாரத்தான் ' - தமிழக மாணவர்கள் உலக சாதனை