இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பதிவுத்துறைக்கான ஒருங்கிணைந்த ஆன்லைன் அடிப்படையிலான ஸ்டார் 2.0 திட்டம், முதலமைச்சர் பழனிசாமி 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
அதனடிப்படையில், சராசரியாக நாளொன்றுக்கு பத்தாயிரம் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது, ஆவணப்பதிவுக்கு வரும் பொதுமக்கள் ஆவணம் தொடர்பான விவரங்களை இணையவழியில் அனுப்பி முன்பதிவு டோக்கனை பெற்று சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று ஆவணம் பதிவு செய்து அன்றே திருப்பி பெறக்கூடிய ஆவணங்களை 70 விழுக்காட்டுக்கு மேல் ஒரே வருகையில் பெற்றுச் செல்கின்றனர்.
பதிவுக்கு அனுப்பப்படும் ஆவண விவரங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால், ஆவணம் பதிவு செய்வதற்கு முன்பு வரை பொதுமக்கள் சரி செய்துகொள்ள மென்பொருளில் வசதி உள்ளது. இணையவழியில் ஒரு ஆவணத்திற்கான விவரங்களை அனுப்பி டோக்கன் பெற்ற பின்பு அந்த டோக்கனை வேறு ஆவணத்திற்கு ஏற்ப, ஆவண விவரங்களில் திருத்தம் செய்து இணைய வழி திருத்த இயலாத விவரங்களான ‘எழுதி வாங்குபவரின் பெயர் மற்றும் அவரின் உறவுமுறைப் பெயர்‘ ஆகியவற்றை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு நடைபெறும் நாளன்று மாற்றம் செய்து டோக்கனை வேறு நபர்களுக்கு மாற்றும் வாய்ப்பு இது வரை இருந்து வந்தது.
இது தவறாக உபயோகப்படுத்தப்படுவதை தவிர்க்கும் வகையில், இனிவரும் காலத்தில் ஆவணப்பதிவிற்கு முன்பதிவு செய்து டோக்கன் பெற்ற பின்பு ‘எழுதி வாங்குபவரின் பெயர் மற்றும் அவரின் உறவுமுறைப் பெயர்‘ (தந்தை பெயர் அல்லது கணவர் பெயர் அல்லது பிற) ஆகியவற்றை பொதுமக்கள் பயன்படுத்தும் இணையதளத்திலோ அல்லது சார்பதிவாளர் அலுவலகத்திலோ இனி மாற்றம் செய்ய இயலாது. பொதுமக்களின் நலன் கருதி மென்பொருளில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தப் புதிய மாற்றத்தை கருத்தில் கொண்டு டோக்கன் பெறும் முன்னர் ஆவண விவரங்களை இணைய வழி அனுப்பும் போது ஒரு முறைக்கு இரு முறை தெளிவாக சரி பார்த்த பின்பு அனுப்பி வைக்குமாறு பதிவுக்கு வரும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதில் பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 1800 102 5174 என்ற பதிவுத்துறைத் தலைவர் அலுவலக கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஹைதராபாத்தில் கரோனா தடுப்பூசி பரிசோதனை பணிகள் தொடக்கம்!