தமிழ்நாட்டிற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இவர்கள் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும், இலங்கை வழியாக தமிழ்நாட்டில் நுழைந்துள்ளதாகவும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.
இவர்கள் இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் என்றும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் டிஜிபி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். நேற்று நள்ளிரவு முதல் மாநிலம் முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் காவல்துறை சார்பில் வெளியிட்டதாக, ஊடகங்களில் செய்தி வெளியானது. இதற்கு தமிழ்நாடு காவல்துறை தலைவர் திரிபாதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் கோவை முழுவதும் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகின்றனர்.