சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபைலிட்டி (M Auto Electric Mobility) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மின்சாரம், சூரிய சக்தி மூலம் இயங்கும் 13 வடிவங்களிலான புதிய ஆட்டோக்களை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து தமிழ்நாட்டிற்கு அதிகளவில் நவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த முதலீடுகளை ஈர்த்திட, இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் கடந்த ஆண்டு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, சுமார் 35,520-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.
இப்பயணத்தின்போது, துபாயில் நடைபெற்ற முதலீட்டாளர் சந்திப்பில், பெட்ரோல் ஆட்டோக்களை சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார ஆட்டோக்களாக மாற்றி இயக்கும் திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், துபாயின் M Auto Electric Mobility நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, தற்போது, இந்நிறுவனம், 140 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின்சாரம், சூரிய சக்தி மூலம் இயங்கும் 13 வடிவங்களில் புதிய ஆட்டோக்களை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இப்புதிய ஆட்டோக்களை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இந்த ஆட்டோக்களில், சிசிடிவி கேமரா, GPS வசதி, ஆபத்து பொத்தான் (Panic Button), TAB போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆட்டோக்களின் ஓட்டுநர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்களே.
இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.