இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைத் துறை, ஊர்க்காவல் படை, தமிழ்நாடு விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்கள், பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் இந்த ஆண்டு,
- காவல் துறையில் காவல் கண்காணிப்பாளர் முதல் முதல்நிலை காவலர் வரையிலான 100 அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும்,
- தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையில் துணை இயக்குநர் முதல் தீயணைப்பு வீரர் நிலை வரையிலான 10 அலுவலர்கள் பணியாளர்களுக்கும்,
- சிறைத்துறையில் உதவி சிறை அலுவலர் முதல் முதல்நிலை சிறைக்காவலர் வரையிலான 10 அலுவலர்கள், பணியாளர்களுக்கும்,
- ஊர்க்காவல் படையில் மண்டல தளபதி முதல் ஊர்க்காவல் படை வீரர் வரையிலான 5 அதிகாரிகள், பணியாளர்களுக்கும்,
- விரல்ரேகைப் பிரிவில் 2 துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறை பிரிவில் 2 அலுவலர்கள் முறையே உதவி இயக்குநர், அறிவியல் அலுவலர் ஆகியோருக்கும்
அவர்களின் மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் வழங்கிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.
பதக்கங்கள் பெறுகின்றவர்களுக்கு அவரவர் தம் பதவிக்கேற்றவாறு, பதக்க விதிகளின்படி வெண்கல பதக்கம், ஒட்டுமொத்த மானிய தொகையும் அளிக்கப்படும்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சரின் வீரதீரச் செயலுக்கான தீயணைப்புத் துறை பதக்கம், கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி அன்று திருநெல்வேலி சேவியர் காலனியில் உள்ள 70 அடி உயர மாநகராட்சி நீர்நிலைத் தொட்டி மேலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த எஸ். கணேசன் (45) என்பவரை காப்பாற்றியதற்காக, பாளையம்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்தைச் சார்ந்த எஸ்.வீரராஜ், நிலைய அலுவலர் மற்றும் எஸ்.செல்வம், தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்பு வீரர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இருவருக்கும் தலா ரூ.5 லட்சம் பண வெகுமதி வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.