கரோனா பாதிப்பால் உயிரிழப்பவர்களின் உடலை தானாக தகனம் செய்யும் விதத்தில் 'M Zafi Rescuer' என்னும் தானியங்கி மின்சார அவசர ஊர்த்தியை வடிவமைத்துள்ளனர் சென்னையை சேர்ந்த தொழில் முனைவோர்கள். மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப தொழில்நுட்பமும் வளர்ச்சி கண்டு வருகிறது. அதுபோல மனித இனத்திற்கு ஏதேனும் ஆபத்து என்றால் தொழில்நுட்பம் பெரிதும் கைகொடுக்கும். தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால் தற்போது எந்த சவாலையும் சந்திக்கலாம் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
கரோனா சூழலை எதிர்கொள்ள தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் பெரிதும் உதவி வருகிறது. கையை நீட்டினால் தானாக சானிடைசர் தெளிக்கும் இயந்திரம், கரோனா நோயாளிகளுக்கு ரோபோட்ஸ் மூலம் உணவு மற்றும் மருந்துகள் வழங்குவது என பல கண்டுபிடிப்புகள் தொடர்ந்து வருவது கரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் நமக்கு நம்பிக்கை அளிக்கிறது.
தற்போது இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், 18 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக முன்னணி களப்பணியளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், சுகாதாரத் துறை, மாநகராட்சித் துறை பணியாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். கரோனா பாதிப்பால் உயிரிழப்பவர்களின் உடலை தகனம் செய்வதில் ஏகப்பட்ட சிக்கல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் கரோனா பாதித்து இறந்தவர்களின் உடல்களை பொக்லைன் மூலம் தூக்கியெறிந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல புதுவையிலும் ஒரு நிகழ்வு நடைபெற்றது. தொடர்ச்சியான இதுபோன்ற நிகழ்வுகள் நாட்டு மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு கரோனா அச்சம் காரணம் என்று சொல்லப்பட்டாலும், இந்நிகழ்வுகளை தவிர்க்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதற்கு உதவும் வகையில் புதிய தொழிநுட்பம் மூலம் சென்னையை சேர்ந்த தொழில் முனைவோர்கள் ''M Zafi Rescuer' எனும் தானியங்கி மருத்துவ அவசர ஊர்தியை தயாரித்துள்ளனர். இதன்மூலம் எந்த ஒரு மனித தொடர்பும் இல்லாமல் இறந்தவர்கள் தகனம் செய்யமுடியும் என கூறுகின்றனர்.
இதுகுறித்து பேசிய எம் ஆட்டோ இயக்குனர் ( MAuto) யாஸ்மீன் ஜவஹரளி, கரோனா பாதிப்பால் உயிரிழப்பவர்களின் உடல்களை அவமதிக்கும் வகையில் தகனம் செய்வது எங்களுக்கு மன அழுத்தத்தை தந்தது. எனவே ஒரு தொழில் முனைவோராக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதற்கு தீர்வு காணவேண்டும் என எண்ணினேன். அதன்படி எம் ஆட்டோ மற்றும் zafi ரோபோடிக்ஸ் நிறுவனம் இணைந்து கண்டுபிடித்ததுதான் 'M Zafi Rescuer' என்னும் அவசர ஊர்தி. இது இறந்தவர் உடலை தானாக எடுத்து தகனம் செய்வது போல் வடிவைக்கப்பட்டுள்ளது. இது களப்பணியாளர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதைப் பற்றி தமிழ்நாடு அரசிடம் விளக்கியுள்ளோம் என்றார்.
இதையடுத்து பேசிய Zafi ரோபோடிக்ஸ் இயக்குனர் முகமது ஆஷிக் ரஹ்மான், தற்போது 'M Zafi Rescuer' முன்மாதிரி வெற்றிகரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சில மாற்றங்கள் செய்து இன்னும் 15 நாட்களில் முழுவதும் பயன்படுத்தும் வண்ணம் 'M Zafi Rescuer' பயன்பாட்டிற்கு வரும். மின்சாரம் மூலம் இயங்கும் இந்த 'M Zafi Rescuer' 150 கிலோ எடை வரை உள்ள உடலை தாங்க முடியும். இது ஒன்றரை கிமீ தூரத்துக்கு பயணிக்கக் கூடியது, தானாக உடலை எடுக்கும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது. மருத்துவமனையின் பொது சிகிச்சை பிரிவிலிருந்து அவசர சிகிச்சை பிரிவிற்கு நோயாளிகளை மாற்றுவதற்கும் இதனை பயன்படுத்தலாம் என தெரிவித்தார்.