சென்னை அயனாவரத்தில் பெருமாள் என்பவரின் ராயல் என்ஃபீல்ட் வாகனத்தின் பூட்டை உடைத்து இரண்டு நபர்கள் திருடிச் சென்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து இருசக்கர வாகனம் திருடுபோனது குறித்து அயனாவரம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அதேபோன்று சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரெனின் ராகவ். கல்லூரி மாணவரான இவர், நேற்று (ஆகஸ்ட் 23) இரவு வழக்கம் போல வீட்டின் முன்பு சுமார் 1.50 லட்சம் மதிப்புள்ள ஆர்5 200 மாடல் உயர் ரக இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உறங்க சென்றார். இன்று (ஆகஸ்ட் 24) காலை பார்த்தபோது அவரது இருசக்கர வாகனம் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து, மாதவரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அதிகாலை 2 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், வாகனத்தின் பூட்டை உடைத்து திருடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அண்ணாசாலை அப்துல் காதர் தெருவை சேர்ந்தவர் பெரோஸ்(26). பக்கத்து தெருவான லத்தூரம் தெருவில் தனது விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை இரண்டு இளைஞர்கள் திருடிச் சென்றனர்.
ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனம் குறித்து அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருடிச் செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: கரோனா சிகிச்சைக்கு சித்த மருந்து கண்டறிய ஆராய்ச்சி