சென்னை கொரட்டூர் சிடிஎச் சாலையில் அமைந்துள்ள காவல் நிலையத்தின் சோதனை மற்றும் உதவி மையத்தின் பின்புறம் தனியாருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இதில் 10க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு அனைத்து கடைகளும் மூடப்பட்டன. பின்னர் இன்று காலை கடை உரிமையாளர்கள் கடையை திறக்க வந்தனர். அப்போது வணிக வளாகத்தில் இருந்த ஜுஸ் கடை, டீ கடை, ஜெராக்ஸ் கடை என மூன்று கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதில் டீக்கடையில் இருந்த ரூ. 35 ஆயிரம் பணம் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சிகிரெட்டுகளை அள்ளிச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து கொரட்டூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரட்டூர் காவல் உதவி மையத்தில் 24 மணி நேரமும் காவலர் இருந்து வருவது வழக்கம். காவல்துறையினர் இருக்கும்போதே கொள்ளை சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.