சென்னை: கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆங்கூர் கிராண்ட் குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்த வழக்கில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டிய போது 60 வீடுகளின் பராமரிப்பு செலவிற்காக, சதுர அடிக்கு 25 ரூபாய் வீதம் தொகுப்பு நிதியாக 2009 ஆம் ஆண்டு வசூலிக்கப்பட்டதாகவும், பின்னர் 2010 ஆம் ஆண்டில் அந்த தொகை 50 ரூபாயாக உயர்த்தப்பட்டதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
குடியிருப்பை வேறு நபர்களுக்கு விற்கும் போது, மாற்றுக் கட்டணம் வசூலிக்கப்படும் நடைமுறை பின்பற்றப்படுவதாகவும், அதன் படி இந்து பாலா என்பவரின் ஒரு வீட்டை வாங்கிய ஆஷிஷ் தவே என்பவர், டிரான்ஸ்பர் கட்டணத்தை செலுத்த மறுத்ததுடன், பதிவுத் துறை மற்றும் சங்கங்களின் பதிவாளரிடம் புகார் அளித்ததாக கூறியிருக்கிறார்.
புகாரில் விசாரணை மேற்கொண்ட மாவட்ட பதிவாளர், மாற்றுக் கட்டணம் வசூலிக்கும் சங்கத்தின் துணை விதியை செல்லாது என அறிவித்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மாவட்ட பதிவாளரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்து உள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம், ”பராமரிப்பு செலவிற்காக தொகுப்பு நிதி வசூலிப்பது குடியிருப்பவர்களிடையே தேவையில்லாத சிக்கலை உருவாக்கும்.
இதையும் படிங்க: தமிழ்வழி பொறியியல் படிப்புகள் நீக்கப்படாது: அண்ணா பல்கலை. துணைவேந்தர் தகவல்!
வீட்டின் உரிமையாளர் அந்த இடத்தை யாருக்கும் விற்கவோ? இனாமாக வழங்கவோ உரிமை உள்ளது. அதற்காக அந்த இடத்தை பெற்றவருக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் வீட்டு உரிமையாளரின் உரிமை பறிக்கப்படும்” என்றும் குறிப்பிட்டு உள்ளார். ஒவ்வொரு முறையும் குடியிருப்பை வாங்குபவரிடம் மாற்றுக் கட்டணம் வசூலிப்பது தவறு என்றும், அப்படி வசூலித்தால் அந்த தொகை பல மடங்கு ஆகிவிடும் என்பதால் அதை அனுமதிக்க முடியாது என்றும் உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.
அரசு சட்டத்தின் படி, மாற்றுக் கட்டணம் வசூலிக்க தடை விதித்து மாவட்ட பதிவாளர் பிறப்பித்த உத்தரவில் தவறில்லை என கூறி, அந்த உத்தரவை எதிர்த்து சங்கத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். சமூகமாக கூடி வாழும்போது பரஸ்பரம், புரிதல் ஆகியவை முக்கியமானது என்றும் நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் தன் உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: 'அரசு நிலங்களின் குத்தகை விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்க' - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு