சென்னை: மாண்டஸ் புயல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் மெரினா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரைப் பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையில் வங்கக்கடல் பகுதியில் நிலவியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது புயல் சின்னமாக வலுவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தப் புயலினால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேக்கம் ஏற்பட்டால் உடனடியாக வெளியேற்ற 805 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்களை தங்க வைப்பதற்காக 169 நிவாரண மையங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
புயல் கரையைக் கடக்கும் பொழுது மணிக்கு 80 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதையொட்டி, காற்றின் வேகத்தின் காரணமாக விழும் மரம் மற்றும் மரக்கிளைகளை அகற்றுவதற்காக 272 மர அறுவை இயந்திரங்கள், வாகனங்களில் பொருத்தப்பட்ட 2 மர அறுவை இயந்திரங்கள், 6 ஹைட்ராலிக் மர அறுவை இயந்திரங்கள், ஒரு பகுதிக்கு 1 ஜே.சி.பி. என 45 ஜே.சி.பி. வாகனங்கள், 115 டிப்பர் லாரிகள் தயார்நிலையில் உள்ளன.