சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின்போது சிறை சென்ற ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் போராளி விருதும், தேசிய அளவில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களுக்கு இளஞ்சூரியன் விருதும், மாணவர் நலன் மற்றும் சங்க நலனில் சிறப்பாகப் பணியாற்றிவரும் ஆசிரியர்களுக்கு பேரியக்க பெருஞ்சுடர் விருதும் வழங்கப்பட்டன.
இந்த விருது வழங்கும் விழாவில் ஜாக்டோ-ஜியோ முன்னாள் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளர் அன்பரசு, வெங்கடேசன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கு. தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன், "ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக ஆசிரியர்களுக்கு அரசு விருதுகளைக் கூட வழங்காமல் இருக்கிறது. ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது போடப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையும் ஓராண்டு முடிந்துவிட்ட நிலையிலும் ரத்து செய்யவில்லை.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையும் என்ன ஆனது எனத் தெரியவில்லை. ஜாக்டோ-ஜியோ போராட்டத்தினை மாணவர் நலனைக் கருத்தில்கொண்டுதான் வைத்தோம். அரசின் அடக்குமுறைக்காக நாங்கள் பயப்படவில்லை. ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கோரிக்கைகளை விடுத்து பழிவாங்கும் ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
அரசு இதுவரை ரத்து செய்யவில்லை. எனவே ஜாக்டோ-ஜியோ கூட்டத்தை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம்" என்றார்.
இதையும் படிங்க: தேச துரோக வழக்கு: அமுல்யா லியோனாவின் காவல் நீடிப்பு