சென்னை: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்- காயத்ரி தம்பதி. இவர்களுக்கு நித்யஸ்ரீ(13), ஹரி கிருஷ்ணன்(8) என இரண்டு குழந்தைகள் இருந்தன. பிரகாஷ் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். காயத்ரி நாட்டு மருந்துக் கடை நடத்தி வந்தார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பிரகாஷுக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் அடிக்கடி மனைவியுடன் பிரச்சினைகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்றிரவு மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு பிரகாஷ் மரம் அறுக்கும் ரம்பத்தால் தன் இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று (மே28) காலை அக்கம்பக்கத்தினர் பார்த்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் நால்வரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது முதற்கட்ட தகவலில் கடன் பிரச்சினை காரணமாகவே மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்தில் தாம்பரம் காவல் ஆணையர் ரவி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
இது தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையர் ரவி செய்தியாளரிடம் கூறும்போது, “தற்கொலை செய்து கொண்ட பிரகாஷ் தற்கொலை கடிதம் எழுதி வைத்துள்ளார். ஆங்கிலத்தில் உள்ள தற்கொலை குறிப்பில் தங்களை யாரும் தற்கொலைக்கு தூண்டவில்லை, நாங்களே எடுத்துகொண்ட முடிவு என எழுதி சுவரில் ஒட்டி வைத்துள்ளார்.
கடந்த 19ஆம் தேதி ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து பெற்ற மரம் அறுக்கும் எலெக்ட்ரிக் ரம்பம் மூலம் 3 பேரையும் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரகாஷ் மற்றும் காயத்ரியின் கைப்பேசியை ஆய்வு செய்து வருகிறோம். யாராவது தற்கொலைக்கு தூண்டினார்களா அல்லது கடன் பிரச்சினை தானா எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்கிறோம்.
ரூ.3.50 லட்சம் கடன் வாங்கியதற்கான பத்திரம் வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கதவு திறந்திருந்த நிலையில் பக்கத்து வீட்டுக்காரர் முதலில் உள்ளே சென்று பார்த்து போலீசுக்கு தகவல் தெரித்துள்ளார். இந்தச் சம்பவம் இரவு 11 அல்லது 12 மணியளவில் நடந்திருக்கலாம்.
குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து விட்டு, பிரகாஷ் ரம்பத்தால் கழுத்தை அறுத்துள்ளார். இது தற்கொலை சம்பவமாக இருந்தாலும் கொலை என்ற நோக்கத்திலேயே விசாரணை மேற்கொள்வோம்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: விவாகரத்து ஆன பெண்களை குறிவைத்து ஏமாற்றிய மன்மதன் கைது