சென்னை: பெரம்பலூர் திருவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயில் திருப்பணிக்களுக்காக முறைகேடாகப் பணம் வசூலித்தாக சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், கோயிலின் செயல் அலுவலர் ஆகியோர் யூ-ட்யூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு எதிராக ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த மே 29ஆம் தேதி கைது செய்யப்பட்ட கார்த்திக் கோபிநாத் சிறையில் அடைக்கப்பட்டார். தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கார்த்திக் கோபிநாத் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது கார்த்திக் கோபிநாத்தின் தனிப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று (ஜூன் 24) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கார்த்திக் கோபிநாத்தின் தனிப்பட்ட கணக்கு விவரங்களை வங்கியிடம் கேட்டுள்ளதாகவும்; இன்னும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி, போதுமான அவகாசம் அளித்தும் காவல் துறை ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்பதால் முதல் தகவல் அறிக்கைக்கு தடை விதிப்பதாக தெரிவித்தார். மேலும் வழக்கு குறித்து காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை ஜூலை 7ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: கடன்பெறும் செயலிகளில் நூதன மோசடி செய்வதால் மக்கள் அதனை பயன்படுத்தவேண்டாம்: தாம்பரம் போலீஸ் கமிஷனர்!