பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆங்கில பேச்சுத் திறனை மேம்படுத்துவதற்காகவும், ஆங்கிலப் பேச்சுத் திறனுக்காக தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க விரும்பும் பெற்றோர்களின் எண்ணிக்கையை குறைத்து அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் ஆங்கிலப் பேச்சு திறன் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
ஆங்கில மொழியில் சரளமாக உரையாடும் வகையில் பேச்சாற்றலை பெறுவதற்கு முறையான பயிற்சியை அளித்து அதனை அடைய தொடர் முயற்சியையும், ஊக்கத்தையும் அளித்தால் மாணவரின் பேச்சாற்றலை கண்டிப்பாக வளர்க்க இயலும்.
இதனால் அந்த மாணவரின் ஆங்கில மொழி பேச்சாற்றல் அதிகரிப்பது மட்டுமல்லாமல், பாடத்தை தாமாகக் கற்று கருத்துகளை வெளிப்படுத்தும் திறனும் வளர்வதற்கு உதவியாக இருக்கும்.
அதேபோல் மாணவர்கள் பள்ளிக் கல்வியை முடித்து உயர் கல்வி படிப்பதற்கும், வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகளுக்கும், பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளுக்கு சென்று பணிபுரியும் போதும் ஆங்கிலத்தில் பேசுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஒரு புத்தகமும், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தலா ஒரு புத்தகமும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்தப் புத்தகங்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சியை ஆசிரியர்கள் சிறந்த முறையில் கற்பிக்க வேண்டும்.
மாணவர்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிப்பதற்கு வகுப்பறைகளில் நேரம் ஒதுக்க வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை வாரத்திற்கு 90 நிமிடத்திற்கான ஒரு பாட வேளையில் ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க வேண்டும். ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பிற்கு வாரத்திற்கு 45 நிமிடத்திற்கான ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க வேண்டும். ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதை இணை இயக்குநர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள்.
அரசுப் பள்ளிகளில் ஆங்கில பேச்சுத்திறனை வளர்ப்பதற்கு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அறிவுரை வழங்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.