திருவண்ணாமலை மாவட்டம் இருங்கல் கிராமத்தைச் சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழ்நாட்டில் கரோனா தொற்று முதன்முதலாக மார்ச் 7ஆம் தேதி காஞ்சிபுரத்தில் கண்டறியப்பட்டது முதல், அதன் காரணமாக 144 தடை உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டது வரை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊரடங்கு உத்தரவை இரண்டாவது முறையாக நீட்டித்துள்ள மத்திய, மாநில அரசுகள் கரோனா தொற்று பரிசோதனை நடத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் விரிவுபடுத்தவோ, விரைவுபடுத்தவோ இல்லை எனவும் தனது மனுவில் கூறியுள்ளார். குறிப்பாக கரோனா தொற்றை விரைந்து கண்டுபிடிக்கக் கூடிய ரேப்பிட் டெஸ்ட் (RT) கருவிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏப்ரல் 14ஆம் தேதி சுகாதாரத் துறை கணக்கின்படி 48 ஆயிரத்து 440 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறும் நிலையில், 12 ஆயிரத்து 746 பேரிடம் மட்டுமே பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களிடமோ, குடும்பத்தினரிடமோ கரோனா தொற்று பரிசோதனை செய்யவில்லை.
இதன் காரணமாக நாளுக்கு நாள் கரோனா தொற்று உள்ளவர்கள் அதிகரிக்கும் நிலையில் இருப்பதாகவும், அதனைக் கருத்தில் கொண்டு கரோனா தொற்று உள்ளவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு கரோனா பரிசோதனையை விரைவுபடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பைய்யா, ஆர்.பொங்கியப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.