பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி, கரோனா அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் 14ஆம் தேதி அவரது உடல்நிலை மிகவும் மோசமானது என தகவல்கள் வெளியாகின. இந்தச் செய்தி தென்னிந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், "பாலசுப்ரமணியம் விழித்துக் கொண்டிருக்கிறார். பிசியோதெரபி சிகிச்சைக்கு அவர் முழுமையான ஒத்துழைப்பு தருகிறார். பல்நோக்கு மருத்துவக் குழு அவரை தொடர்ந்து கண்காணித்துவருகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.