சென்னை: சித்த மருத்துவர் ஷர்மிகா, 'ஒரு கப் குலாப்ஜாமூன் சாப்பிட்டால் மூன்று கிலோ எடை கூடும், நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும்' உள்ளிட்ட சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டிருந்தார். இந்த கருத்துகள் அறிவியல் பூர்வமான உண்மைக்கு புறம்பாக இருப்பதாகவும் புகார் எழுந்தது.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சில் பதிவாளர், ஜன.6ஆம் தேதி நோட்டீஸில், பதிவுபெற்ற சித்த மருத்துவர் என்.ஷர்மிகா, சித்த மருத்துவ தொழில் விதிமுறைகளுக்கு முரண்பாடான கருத்துகளை சமூக வலைதளத்தில் தெரிவித்ததாக 31.12.2022 வெளியிடப்பட்ட கட்டுரை, பல்வேறு தரப்பினரின் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்வது தொடர்பாக பதிவாளர் முன்பு 24-1-2023 அன்று முற்பகல் 11 மணிக்கு நேரில் வருகை தந்து விளக்கமளிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் சித்த மருத்துவர் ஷர்மிகா தனது வழக்கறிஞருடன் சித்த மருத்துவக் கவுன்சில் பதிவாளர் கணேஷ், சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் கனகவல்லி, சித்த மருத்துவத்துறை இணை இயக்குநர் பார்த்திபன், மாநில மருந்து கட்டுப்பாட்டு அலுவலர், மருந்து ஆய்வாளர் சுஜி கண்ணம்மா ஆகியோர் முன்னிலையில் விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து சித்த மருத்துவர் ஷர்மிகாவின் வழக்கறிஞர் கூறும்போது, கேள்விக்கான விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக அளிப்பதாகத் தெரிவித்தனர். தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சில் பதிவாளரும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநருமான கணேஷ் கூறும்போது, 'சித்த மருத்துவம் குறித்து ஷர்மிகா கூறிய தகவல்கள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் கேள்விக்கான பதில்களை பிப்.10ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் சித்த மருத்துவம் குறித்து தெரிவித்த கருத்துகளை ஆய்வு செய்யக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில் சித்த மருத்துவச் சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பெங்களூருவில் பண மழை.. வாரி இறைத்த நபரால் பரபரப்பு!