தீபாவளி பண்டிகையின்போது ஏற்படும் தீக்காயங்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைப் பிரிவில் தனித்துவமான வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனை தலைமை மருத்துவர் வசந்தாமணி நமது ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பேட்டியில், "கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீக்காயப் பிரிவில் தீபாவளிக்காக சிறப்பு ஏற்படுகளை செய்துள்ளோம். 10 படுக்கை கொண்ட சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. தீபாவளி கொண்டாட்டத்தின்போது எதிர்பாராதவிதமாக வெடி விபத்தில் சிக்குவோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், மருந்து மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 26, 27, 28 ஆகிய மூன்று நாள்களும் 24 மணிநேரமும் இந்தச் சிறப்பு வார்டு இயங்கும்.
அதுமட்டுமின்றி அவசர சிகிச்சைக்கு தேவையான செயற்கை சுவாசம் (வென்டிலேட்டர்ஸ்), ஆக்ஸிஜன் சப்ளை எல்லாமே இங்கு தயார் நிலையில் உள்ளன. ஒரு உதவிப் பேராசிரியர், இரண்டு மருத்துவர்கள் அடங்கிய குழு எப்போதும் தயார் நிலையில் இருக்கும். ஒருவேளை பண்டிகையின்போது தீக்காயம் ஏற்பட்டால் பதற்றம் அடையாமல், காயம் ஏற்பட்ட இடத்தில் முதலில் தண்ணீரை ஊற்ற வேண்டும், அப்படிச் செய்தால் பாதிப்பு குறைய வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தீபாவளி 2019 - சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் நிலையும் பட்டாசு விற்பனையும்!