சென்னை பழைய விமான நிலையம் சரக்கக பகுதியிலிருந்து சிங்கப்பூா் செல்லும் சரக்கு விமானம் இன்று (பிப்.10) காலை புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் ஏற்ற வந்திருந்த சரக்கு பாா்சல்களை சுங்கத்துறையினா் ஆய்வு செய்தனா். அப்போது, சென்னையில் உள்ள (ஓம் ஶ்ரீ சாய்) என்ற ஏற்றுமதி நிறுவனத்திலிருந்து சிங்கப்பூருக்கு அனுப்ப பெரிய பாா்சல்கள் வந்திருந்தன.
அந்த பாா்சல்களில் 600 பெட் சீட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அந்த பாா்சல்களை பிரித்து பார்த்தனா். அதில், பெட் சீட்களுக்கிடையே 25 செம்மரக் கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பார்சல்களையும், செம்மரக் கட்டைகளையும் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அந்த தனியாா் ஏற்றுமதி நிறுவன உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகள் 500 கிலோ எனவும், அதன் சர்வதேச மதிப்பு ரூ.25 லட்சம் எனவும் சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 1.5டன் செம்மரக்கட்டை பறிமுதல் : இருவர் கைது