திருச்சி கன்டோன்மென்ட்டை சேர்ந்த வழக்கறிஞர் ஏ. ஜோசப் சகாயராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் நகைக்கடன் தொழிலில் ஜொலிக்காத நிலையில், தனியார் நிதி நிறுவனங்கள் அனைத்தும் தங்கநகைக் கடன் தொழிலில் கொடிகட்டி பறப்பதாக பொதுமக்களை கவரும் விதமாக கவர்ச்சிக்கரமான அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். இதனால் பெரும்பாலானவர்கள் தனியாரை நாடுகின்றனர். தனியார் நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையின் கீழ் வந்தாலும், விருப்பம் போல் வட்டி நிர்ணயம் செய்வது, மீட்கப்படாத நகைகளை ஏலம் விடுவது போன்ற விதி மீறல்களில் அந்நிறுவனங்கள் ஈடுபடுகின்றன.
மேலும் அடமான நகைகள் திருப்பப்படவில்லை என்றால், அவற்றை பொது ஏலம் விடும் ஆர்.பி.ஐ. விதிமுறைகளை அந்நிறுவனங்கள் மீறுவதால், அவசர தேவைக்காக தங்க நகைகளை அடமானம் வைக்கும் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.
பொதுமக்களிடம் இருந்து தங்க நகைக்கடனுக்காக அதிக வட்டி வசூலிக்கவும், கடன் தொகையை திருப்பிச் செலுத்தாதவர்களின் தங்க நகைகளை ஏலம் விடுவதற்கும் தடை விதிக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் தங்க நகைக்கடன் வழங்குவதை ஒழுங்குப்படுத்தி மேற்பார்வையிட தமிழ்நாடு அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம். சத்யநாராயணன், ஆர். ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர், தமிழ்நாடு அரசின் நிதித் துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: புதிய தொழில்முனைவோர் அடைமானம் இல்லாமல் கடன் பெறலாம்!