சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என 2017ஆம் ஆண்டு நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தைச் செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட வழக்கு, சென்னை நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
சசிகலாவின் இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தரப்பில் மனு தாக்கல்செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவுக்கு சசிகலா தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட பதில் மனுவில், "உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கட்சியின் பெயர், சின்னம் தொடர்பாக மட்டுமே தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. கட்சியின் மற்ற விவகாரங்களில் தலையிட முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது" எனக் கூறியுள்ளார்.
மேலும், உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கையும் தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளதாகக் கூறிய சசிகலா, அதிமுக நிர்வாகிகள் தாக்கல்செய்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையில், இந்த வழக்கிலிருந்து தினகரன் விலகியுள்ளதால் சசிகலா தரப்பில் திருத்த மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை பதில் மனு தாக்கல்செய்தார்.
அதில், "சசிகலாவின் திருத்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. விசாரணையைக் காலம் தாழ்த்த வேண்டுமென்ற நோக்கில் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. சசிகலாவின் திருத்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கில் கட்சியின் நிதி விவகாரங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாலும், வங்கிகளை எதிர்மனுதாராக சசிகலா இணைத்துள்ளதாலும், வங்கியின் தரப்பை பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்ட உரிமையியல் நீதிமன்றம், வழக்கு விசாரணையை செப்டம்பர் 6ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளது.
இதையும் படிங்க: 100 நாள்களை நிறைவுசெய்யும் ஸ்டாலின் அரசு