ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இவரது உடலை சென்னை அம்பத்தூரில் உள்ள மின்மயானத்தில் எரிக்க முற்பட்டபோது, மின் மயானத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் உரிய பாதுகாப்பு பொருள்களின்றி எரிக்க முடியாது என்று மறுப்புத் தெரிவித்துள்ளனர். மேலும் சுற்றியுள்ள பொதுமக்களும் மருத்துவர் உடலை மின் மயானத்தில் எரிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது போன்று கரோனா பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்தால், அவர்களை மின் மயானங்களில் எரிக்க பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருப்பதாக, காவல் துறையினருக்குப் பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்தவண்ணம் உள்ளன.
இதனையடுத்து சென்னை முழுவதும் கரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களை எரிப்பதற்குத் தனியாக ஒரே ஒரு மின் மயானத்தை ஒதுக்க வேண்டுமென பல்வேறு காவல் துறையினரின் தரப்பிலிருந்து உயர் அலுவலர்களுக்கு கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.
இது குறித்து சென்னை மாநகராட்சி தரப்பில் கேட்டபோது, கரோனா பாதிப்பால் உயிர் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு அவர் இறந்த மருத்துவமனை அருகிலேயே குறிப்பிட்ட மின் மயானங்களை ஒதுக்கி, பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனர்.
மேலும், சென்னை முழுதும் தனியாக ஒரே ஒரு மின் மயானம் ஒதுக்க முடியாது எனவும், போதிய விழிப்புணர்வு இல்லாமல் சில விஷக் கிருமிகளால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், காவல் துறை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கரோனா பீதி: 100 விழுக்காடு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாறும் திருப்பத்தூர்!