சென்னை: சில நாட்களாக சென்னையில் பரவலாக நல்லமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பூக்கடை காவல் நிலையம் பின்புறம் உள்ள பேருந்து நிலைய நிழற்குடையில் காவல் நிலைய எழுத்தர் கல்யாணசுந்தரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் மழை சிறிது அதிகமாக பெய்துள்ளது.
சூதாரித்த காவலர்
அப்போது நாய் ஒன்று 4 குட்டிகளுடன் நிழற்குடையினுள் வந்து நின்றுள்ளது. இந்நிலையில், நாய்க்குட்டிகளில் ஒன்று பேருந்து நிலைய நிழற்குடையின் தரைத்தளத்தில் மின்சார கேபிள்கள் செல்லும் பைப்புகளின் மீது ஏறி உள்ளது.
அப்போது நாய் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளது. இதை அறியாமல் எழுத்தர் கல்யாணசுந்தரம் நாய்க் குட்டியைத் தூக்கியுள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து உள்ளது. இருப்பினும், பெரும் பாதிப்பு இல்லாமல் கல்யாணசுந்தரம் உயிர் தப்பினார்.
இதையடுத்து உடனடியாக மின் வாரிய அலுவலர்களுக்கு காவல்நிலைய எழுத்தர் அளித்த தகவலின் அடிப்படையில், மின்வாரிய அலுவலர்கள் விரைந்து வந்து மின்சார கேபிள்கள் செல்லக்கூடிய பைப்புகளில் ஏற்பட்டுள்ள மின் கசிவை சரி செய்தனர். இதனால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.
பெரும் விபத்து தவிர்ப்பு
பொதுமக்கள் யாராவது மின்கசிவு இருப்பது தெரியாமல் மின்சாரம் செல்லும் பைப்புகளை மிதித்து இருந்தால், பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், மழைக்காலம் தொடங்கி விட்டதால், சாலையில் செல்லக்கூடிய மின்சாரம் தொடர்பான கேபிள்களைப் பராமரித்து வைக்க வேண்டும் என்று பொதுமக்களால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: த(க)ண்ணீரில் மிதக்கும் கடவுளின் தேசம்: கரோனாவுக்குப் பின் பேரிடி!