சென்னை : திருவல்லிக்கேணியில் உள்ள நடுக்குப்பத்தில் இல்லம் தேடி கல்வித் திட்ட பயிற்சி மையத்தை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ”இல்லம் தேடி கல்வி திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று(ஜன.03) தொடங்கப்பட்டது. இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரிய 4 லட்சத்து 93 ஆயிரம் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர்.
அவர்களை கண்டறிந்து தகுதியானவர்களை தேர்வு செய்துள்ளோம். கரோனா தொற்று காரணத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் கல்வி பயிலாமல் உள்ளனர். எனவே இல்லம் தேடி கல்வித் திட்டம் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் மையங்கள் இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்காக தேவைப்படுகின்றன.
பொதுத்தேர்வு கட்டாயம்
தற்போது வரை 80 ஆயிரம் மையங்கள் தயார் நிலையில் உள்ளது. இல்லம் தேடி கல்வித் திட்டத்தினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். கல்வி தொலைக்காட்சி மூலம் ஏற்கனவே மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் தற்போது 15 வயது முதல் பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினை முதலமைச்சர் இன்று தொடங்கியுள்ளார். 15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி மிகவும் முக்கியம்.
மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால் கடந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் சில முறைகள் கையாளப்பட்டன. எனவே இந்த ஆண்டு 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக நேரடியாக பொது தேர்வு நடைபெறும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : விதிமுறைகளைக் கடைப்பிடிக்காதவர்களுக்குத் தயக்கமின்றி அபராதம் விதிக்க உத்தரவு