இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஒவ்வொரு ஆண்டும் அரசின் சார்பில், ஏப்ரல் 14ஆம் நாள் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளும், ஏப்ரல் 17ஆம் நாள் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாளும் சென்னையில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டுவருகின்றன.
சென்னை துறைமுகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் உருவச் சிலைக்கும் சென்னை, கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை உருவச் சிலைக்கும் அரசின் சார்பில் மாலைகள் அணிவித்தும், உருவப்படங்களுக்கு மலர் தூவியும் மரியாதை செய்யப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சரிடம் (ஏப்ரல் 11) நேற்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டபோது, பொதுமக்களின் நலன் கருதியும், கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கத்திலும், ஊரடங்கு உத்தரவைக் கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே மேற்குறிப்பிட்ட தலைவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில், அவர்களின் உருவச் சிலைகளுக்கு அரசின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் மட்டும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். 144 தடை உத்தரவு காரணமாக இந்த நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டாம். மேலும், நினைவிடங்களுக்குச் செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்வரை மாவட்டங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பொதுமக்கள் கூடாமல் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மட்டுமே மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர். இதனை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டும். எனவே, பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.