உலகளாவிய பெருந்தொற்று நோயான கரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் அதிவேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் 1,596 பேருக்கு கோவிட்-19 பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 18 பேர் உயிரிழந்ததாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை தெரிவித்திருந்தது.
கடந்த 25ஆம் தேதியிலிருந்து தமிழ்நாட்டில் பள்ளி-கல்லூரிகள், மக்கள் கூடும் வழிபாட்டுத் தலங்கள், பொழுதுபோக்கு மையங்கள், அரசு அலுவலங்கள் என அனைத்தையும் மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டது. வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுக்க பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் 144 தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நாளுக்குநாள் அதிகரித்து வந்த தொற்றுநோய் பரவல் காரணமாக தமிழ்நாடு இரண்டாம்கட்ட ஆபத்து நிலையை அடைந்திருக்கிறது. அம்மாநிலத்தில் 22 மண்டலங்கள், கோவிட்-19 பெருந்தொற்றின் சிவப்பு குறியீட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கரோனா ஊரடங்கு உத்தரவை இரண்டாம் கட்டமாக, மே மாதம் 3ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும், மாநில அரசுகள் அதில் சில தளர்வுகளை நடைமுறைப்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, தொழில் நிறுவனங்களுக்கு ஏப்ரல் 20ஆம் தேதிமுதல் இயங்க சில புதிய வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதன் கீழ் தொழில்கள், அரசு அலுவலகங்கள் இயங்க சில தளர்வுடன் இசைவு அளித்துள்ளது. தளர்வு அளிக்கப்பட்டுள்ள அரசு அலுவலகங்களில் சார் பதிவாளர் அலுவலகமும் ஒன்றாக அறிய முடிகிறது.
இந்நிலையில், சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்கத் தொடங்கினால் தமிழ்நாடு அரசு முன்னெடுத்துவரும் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளில் குந்தகம் விளைப்பதாக அமையும் எனத் தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும், ஆவணப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகைபுரியும் சார்பதிவாளர் அலுவலங்கள் இயங்க அரசு அளித்துள்ள தளர்வை நீக்கி மே 3ஆம் தேதிவரை நீட்டிப்பு செய்ய வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கத்தின் தலைவர் ஆறுமுகநாவராஜ் கோரிக்கை கடிதமொன்றை எழுதியுள்ளனர்.
![Prohibition to run SUB Registrars Offices! - Request of the Registrars Association](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6890570_1_che.jpg)
![Prohibition to run SUB Registrars Offices! - Request of the Registrars Association](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6890570_2_che.jpg)
அதில், “பிறப்பு - இறப்பு சான்றிதழ்கள், திருமணப் பதிவு, ஆவணப்பதிவு மதிப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களைப் பெறுவதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சார்பதிவாளர் அலுவலகங்கள் வந்துசெல்வது வழக்கம்.
இப்படியாக, மக்கள் கூடுகை அதிகரித்தால் ஏற்கனவே இட நெருக்கடி மிகுந்த சார்பதிவாளர் அலுவலங்களில் தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது கடினமானதாக மாறிவிடும்.
அலுவலகங்கள் இயங்கத் தொடங்கினால் தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இடர் ஏற்படும். அதேபோல ஊரடங்கு உத்தரவையும் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத சூழல் ஏற்படும்.
எனவே, தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளவரை சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப்பதிவுப் பணிகள் நடைபெற தடைவிதிக்கும் ஆணையை வெளியிட வேண்டும்” எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : பெட்ரோல் விலையை மத்திய அரசு குறைக்காதது ஏன்? - இந்திய தேசிய லீக் கட்சி கேள்வி