இதுதொடர்பாக தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஆறுமுகம் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழ்நாட்டில் உள்ள மெட்ரிகுலேசன் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 9ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்புவரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதேபோல், எல்கேஜி முதல் எட்டாம் வகுப்புவரை பயிலும் மாணவர்களைச் சேர்த்து அரசு அறிவிக்க கூடாது.
எல்கேஜி முதல் எட்டாம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் தேர்ச்சி அந்தந்தப் பள்ளிகளே முடிவு செய்ய வழிவகை செய்ய வேண்டும். அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கவேண்டிய 2020-21ஆம் ஆண்டிற்கான கட்டணத்தை ஏப்ரல் மாத இறுதிக்குள் வழங்க வேண்டும்.
தனியார் பள்ளிகளில் நேரடியாக வகுப்புகள் நடத்த இயலாத நிலையில், விடுமுறைக் காலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்திலிருந்து தனியார் பள்ளி மாணவர்களின் விவரங்களை எடுத்து சேர்க்கை செய்துள்ளனர். எனவே கடந்த மார்ச் மாதம் நிலவரத்தின் படி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். அதன் பின்னர் தனியார் பள்ளியில் இருந்து அரசுப் பள்ளியில் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்ய வேண்டும்.
2011ஆம் ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட பள்ளிகளுக்கு நகர்ப்புற அனுமதி வாங்க வேண்டும் என்ற கட்டாயத்தை மாற்றவிதியை வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்ற கட்டாயத் தாய்மொழிக் கல்வி என்பது அப்படியே ஏற்காமல் விரும்பும் மாணவர்கள் ஆங்கில வழியில் படிக்க ஏதுவாக தனியார் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பை தொடர்ந்து நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்