முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக நளினியின் தாய் பத்மா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், இருவரும் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் தினமும் 10 நிமிடங்கள் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். லண்டனில் உள்ள முருகனின் தங்கையுடனும் நளினியை பேச அனுமதிக்கவேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சட்டப்பேரவையில் 7 பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய அரசு, அவர்களை தங்கள் உறவினர்களிடம் பேசுவதற்கு அனுமதி மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, இது இரு நாட்டு பாதுகாப்பு தொடர்பாக விவகாரம் என்பதால், வெளிநாட்டில் வசிப்பவர்களிடம் வீடியோ கால் மட்டுமல்லாமல் தொலைபேசி வாயிலாகக்கூட சிறைக்கைதிகளை பேச அனுமதிப்பதற்கு சிறை விதிகள் ஏதும் இல்லை என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைகேட்ட நீதிபதி கிருபாகரன், தன்னுடைய தந்தையின் மரணம் தொடர்பாக வெளிநாட்டில் வாழும் தன் தாயுடன் முருகன் தொலைபேசி மூலமாக பேசுவதால் என்ன பாதுகாப்பு பிரச்னை ஏற்படப்போகிறது. முருகன் வெளிநாட்டவராக இருந்தாலும் மனித உணர்ச்சி என்பது அனைவருக்கும் ஒன்றுதான் என குறிப்பிட்டு வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.