சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் 13 இடங்களில் கிளைகளைத் தொடங்கி தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி 1,678 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.
அவ்வாறு வசூலித்த பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு திரும்ப கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நிறுவனத்தின் இயக்குநர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் காவல்துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் என கூறி, இயக்குநர்களில் ஒருவரான காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹரீஸ்,31 என்பவர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி எஸ்.அல்லி முன் நேற்று (ஜூன்.17) விசாரணைக்கு வந்தது. அப்போது, சாட்சிகளைக் கலைக்கும் வாய்ப்புள்ளதால் முன் ஜாமின் வழங்கக்கூடாது என காவல் துறை தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஹரீஸின் முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு... வீடியோ எடுத்து மிரட்டிய 7 பேர் கைது...