சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கழிவு நீர்த்தொட்டிகளுக்குள் சிக்கி விஷவாயு தாக்கி பணியாளர்கள் மரணம் அடையும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. கடந்த 7 மாதங்களில் 10க்கும் மேற்பட்டவர்கள் கழிவு நீர் தொட்டிகளில் விஷவாயு தாக்கி மரணம் அடைந்துள்ளனர்.
இதுபோன்ற மரணங்களைத்தடுக்க மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் தடை சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் எனத்தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தடை சட்டத்தை முழுமையாக அமல்படுத்த மாவட்ட வாரியான கண்காணிப்புக்குழுக்களை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், உட்கோட்ட அளவிலான குழுவையும் தமிழ்நாடு அரசு மாற்றியமைத்துள்ளது.
அதன்படி, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுவிற்கு ஆதிதிராடவிடர் துறை அலுலவர் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தனி தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள், காவல் கண்காணிப்பாளர், டவுன் பஞ்சாயத்து உதவி இயக்குநர், அனைத்து நகராட்சி ஆணையர்கள், ரயில்வே வாரிய உறுப்பினர், நிதி உதவி அளிக்கும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், நான்கு சமூக சேவகர்கள், சட்டத்தை அமல்படுத்தத் தேவையான அரசு அலுவலர்கள் என்று 8 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
உட்கோட்ட அளவிலான குழுவிற்கு உட்கோட்ட நடுவர் தலைவராகவும், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் உறுப்பினர் செயலராகவும் இருப்பர். மேலும் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் உறுப்பினர்களாக உள்ள துறைகளின் உட்கோட்ட அலுவலர்கள் இந்த குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுக்கள் சட்டங்களை நடைமுறைப்படுத்துதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெற்று தருதல், மரணங்கள் குறித்து விசாரணை செய்தல் உள்ளிட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 74 கல்லூரிகள் செமஸ்டர் தேர்வு வினாத்தாள் குளறுபடி!