கரோனா தொற்று இல்லாத 4,000 பேருக்கு தொற்று உறுதி எனத் தவறாக பதிவேற்றம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில், பிரபல தனியார் ஆய்வகமான மெட்ஆல் நிறுவனத்தின் கரோனா பரிசோதனை அனுமதியை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.
கொல்கத்தாவில் எடுக்கப்பட்ட மாதிரிகளை கள்ளக்குறிச்சியில் எடுத்ததாக தவறாகப் பதிவேற்றம் செய்ததால் இந்த அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்திய அளவில் தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் சுகாதாரத்துறை ஆய்வு செய்ததில் ஆய்வகத்தில் குளறுபடிகள் நடந்திருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக மெட்ஆல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அனுப்பியுள்ள நோட்டீசில், 'அர்ப்பணிப்பு உணர்வோடு கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தப் போராடி வரும் முன்களப் பணியாளர்களின் முயற்சிகளை சீரழிக்கும் விதமாக இத்தகைய செயலில் அந்த ஆய்வகம் ஈடுபட்டிருக்கிறது. இது அலட்சியத்தால் நிகழ்ந்த தவறா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலா என்பதைக் கண்டறிய வேண்டியுள்ளது.
தொற்று இல்லாதவர்களுக்கு கரோனா இருப்பதாக கணக்கு காட்டியிருப்பது சம்பந்தப்பட்ட ஆய்வகத்துக்கும், சில மருத்துவமனைகளுக்கும் விதிகளை மீறிய தொடர்பு இருப்பதை உணர்த்துகிறது. தொற்று இல்லாத மக்களையும் மருத்துவமனைக்கு அழைத்து, அதன் வாயிலாக பணம் ஈட்டும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.
இந்தச் செயலில் ஈடுபட்ட தனியார் ஆய்வகத்துக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான அனுமதி ரத்து செய்யப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மெட்ஆல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் 3 வாரங்களுக்குள் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'கரோனா இல்லை என்று சொல்லும் நாளே மகிழ்ச்சியான நாள்': மு.க.ஸ்டாலின்